(றிஸ்வான் சாலிஹூ)
அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் எண்ணக்கருவில் உருவான தேசிய பாடசாலை திட்டத்தில் புதிதாக தரமுயர்த்தப்பட்ட அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்திற்கு தற்கால கொவிட்-19 காலத்தில் மாணவர்களின் கல்வி நடவடிக்கை தொடர்பில் ஆராய்வதற்கு (தேசிய பாடசாலை) இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர்ஸ்தானிகர் அலுவலக இரண்டாம் நிலை செயலாளர் (அரசியல்) திருமதி. ஆயிஷா அபுபக்கர் பஹட் இன்று (10) சனிக்கிழமை காலை வருகை தந்திருந்தார்.
பாடசாலையின் அதிபர் எஸ்.றிபாயுடீன் தலைமையில் வருகை தந்த செயலாளர் மற்றும் அதிதிகளை வரவேற்று கல்லுாரியின் உள்ளக இடங்களை காண்பித்தும் தற்போதைய பாடசாலையின் நிலவரத்தையும் விளக்கிக் கூறியதுடன், தற்கால கொரோனா அசாதாரன நிலைமையினால் மாணவர்கள் தங்களது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதிலுள்ள சிக்கல்களையும் எடுத்துக்கூறி, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை இலகு படுத்தக்கூடியதும், தற்காலத்திற்கேற்றதுமான ”நவீன இலத்திரனியல் மூலம் கற்றல்” முறையில் மாணவர்கள் கற்பதற்கான அனைத்து வசதி வாய்ப்புக்களையும் எமது பாடசாலையில் செய்து தரும் படி இரண்டாம் நிலை செயலாளர் திருமதி. ஆயிஷா அபுபக்கர் பஹட் அவர்களிடம் வேண்டி இந்த கோரிக்கை தொடர்பில் மகஜர் ஒன்றையும் வழங்கினார்.
வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட திருமதி. ஆயிஷா அபுபக்கர் பஹட், தன்னிடம் வைக்கப்பட்ட இந்த தேவையை மிக விரைவில் மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மையமாக வைத்து செய்து தருகிறேன் என்று அவர் உறுதிமொழி அளித்ததோடு, இந்த விஜயம் தொடர்பில் பாடசாலை அதிபருக்கு திருமதி. ஆயிஷா அபுபக்கர் அவர்களினால் நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் இஸட்.தாஜுடீன் அவர்களும், இலங்கை தென்கிழக்கு பல்கழைக்கழகத்தின் பேரவை உறுப்பினர் கலாநிதி. அன்வர் எம் முஸ்தபா அவர்களும், தென்கிழக்கு பல்கழைக்கழகத்தின் பேரவை உறுப்பினரும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியராளருமான என்.ரீ.சிறாஜுதீன் அவர்களும், பாடசாலையின் பிரதி அதிபர் எம்.எஸ்.எம்.அஸ்லம், பழைய மாணவர் சங்க செயலாளர் ஆசிரியர் ஏ.ரீ.நக்கீல், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
