(றிஸ்வான் சாலிஹு)
ஆரோக்கியமான உற்பத்தித்திறன் மிக்க பிரஜைகளை உருவாக்குவதற்கு நச்சுத் தன்மையற்ற உணவை பெற்றுக்கொள்வதற்கான மக்களின் தார்மீக உரிமை "சுபீட்சத்தின் நோக்கு" எனும் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவர்களின் கொள்கைப் பிரகடனத்தின் அடிப்படையில், அக்கரைப்பற்று மாநகர சபையினால் ஏலவே முன்னெடுக்கப்படும் சேதனப்பசளை உற்பத்தியினை எதிர்வரும் காலங்களில் அதிகரிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (16) வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று மாநகர கௌரவ முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்களின் தலைமையில் மாநகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் எம்.ஏ. றாஸீக், அக்கரைப்பற்று மாநகர சபை ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ. காதர், பிரதேச செயலக பிரதி திட்டமிடல் அதிகாரி, மாநகர சபை வைத்தியர் மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, இராணுவ உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
உலகில் இரசாயனக்கலப்புடனான விஷத்தன்மை கொண்ட உணவுவகைகளை உட்கொள்ளும் நாடுகள் பட்டியலில் இலங்கை முதலிடம் வகிப்பதாக உள்நாட்டு,வெளிநாட்டு ஆராய்ச்சி நிபுணர்கள் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மேதகு ஜனாதிபதியின் கால பெறுமானம் மிக்க இயற்கை உரப்பாவனையை விவசாயிகள் மத்தியில் விஸ்தரிக்கும் உயிர்ப்புள்ள கொள்கை திட்டத்தை கடந்த பத்து வருடங்களாக அக்கரைப்பற்று மாநகர சபை முன்னெடுத்து வருகின்றது என்று மாநகர முதல்வர் அஹமட் ஸகி தெரிவித்தார்.