அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பள்ளிக்குடியிருப்பு, பட்டியடிப்பிட்டி, இசங்கணிச்சீமை மற்றும் ஆலிம்நகர் பிரதேசங்களில் கொரோனா மிகவும் அபாயகரமாகப் போய்க்கொண்டிருப்பது கவலைகொள்ளச் செய்வதோடு, அதை கவனமெடுக்கவும் தூண்டுகிறது என்று அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கெளரவ எம்.ஏ.றாசீக் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே நாட்டில் வேகமாகப் பரவிவரும் 'டெல்டா' திரிபு தொடர்பில் பின்வரும் நடைமுறைகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறும் தவிசாளர் அம்மக்களை கேட்டுக்கொள்கின்றார்.
1. மக்கள் நடமாட்டங்கள் அதிகமாகக் காணப்படும் இடங்கள், வயல் பிரதேசங்கள், ஆற்றங்கரை போன்ற பொது இடங்களில் பொது மக்கள் கூடுவது மறு அறிவித்தல்வரை தடை செய்யப்பட்டுள்ளது.
2. திருமணம், வலீமா, மையத்து போன்ற சகல நிகழ்வுகளும் 25 பேருடன் மட்டுப்படுத்தப்படுவதோடு, கலந்து கொள்ளும் அனைவரது தகவல்களும் பதியப்பட வேண்டும்.
3. இன்று வெள்ளிக்கிழமை சகல பள்ளிவாயல்களிலும் ஜும்ஆ தொழுகையை தவிர்த்துக்கொண்டதைப்போன்று ஐங்காலத் தொழுகைக்காக வருபவர்களின் எண்ணிக்கையில் மட்டுப்படுத்தல் பேணப்படுவதோடு, முகக்கவசம் அணிவதிலும், ஏனைய சுகாதார விதிமுறைகளை பேணுவதிலும் கூடிய கவனெமெடுப்பதுடன் குர்ஆன் மதரசாக்கள், பகுதிநேர வகுப்புக்களை முடியுமானவரைக்கும் தற்காலிகமாக தவிர்த்துக்கொள்ளல்.
4. ஊரில் வைரஸ்பரவல் அதிகரித்திருப்பதாலும் வயது வித்தியாசமின்றி பலர் வைத்தியசாலைகளில் கவலைக்கிடமாக இருப்பதாலும் பொது மக்கள் வீண் பிரயாணங்கள், ஒன்றுகூடல்களை முற்றாக நிறுத்திக் கொள்ளவும்.
5. PCR மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மக்கள் குழுமியிருக்கும் இடங்கள் மற்றும் கடற்கரை போன்றவற்றில் நாளை முதல் நடைபெறும்.
ஊரின் நிலமைகள் மோசமாக இருப்பதால் மேற்படி கட்டுப்பாடுகளை பொது மக்கள் குறிப்பாக இளைஞர்கள் உதாசீனம் செய்யும் பட்சத்தில் எமதூரை மீண்டும் முழுமையாக முடக்குவதற்கான தீர்மானத்திற்குச் செல்லநேரிடும் என்று மன வேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களுக்கு ஏற்படும் எதுவிதமான அசௌஙரியங்கள் தொடர்பிலும் எமது பிரதேச சபையுடன் அல்லது கௌரவ உதவித் தவிசாளர், உறுப்பினர்களோடு தொடர்புகளைப் பேணிக்கொள்ளும்படி அவர் பொதுமக்களை கேட்டுள்ளார்.