(றிஸ்வான் சாலிஹு)
சுகாதாரத் துறையினரின் கட்டளையை மீறி நடந்து கொண்டவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை இன்று (08) அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றது.
இசங்கணிச்சீமை,சம்பு நகர், ஆலம்குளம்,ஆலிம் நகர் போன்ற வாய்க்கால் கரையோரங்கள் மற்றும் வயல்வெளிகளில் குடும்ப சகிதம் சென்று உணவு மற்றும் நீராடுகின்றவர்களுக்கே இந்த அதிரடி நடவடிக்கையான அன்டிஜன் பரிசோதனை , அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ.காதர் அவர்களின் நேரடி கண்காணிப்பில் நடைபெற்றது.
மக்களைப் பாதுகாப்பதற்காக இரவு பகலாக தங்களது உயிர்களையும் கூட பொருட்படுத்தாமல் களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் சுகாதாரத்துறையினரின் வேண்டுகோளை மக்கள் மதிப்பளிக்காமல், எது நடந்தாலும் எங்களுக்கு பிரச்சினை இல்லை என்று ஒரு சாரார் இவ்வாறான படு மோசமான காரியங்களில் ஈடுபடுவது மிகவும் வேதனை அளிப்பதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் காதர் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
எனவே களியாட்ட நிகழ்வுகள், விருந்தோம்பல் , ஒன்று கூடுதல் இருந்து தவிர்ந்து கொண்டு சுகாதார வழிமுறையை பின்பற்றி நடந்து கொள்ளுமாறும் அவர் பொதுமக்களை வினயமாக கேட்டுள்ளார்.
நமது பிராந்தியத்தில் தற்போது கொரோனா வைரஸினால் அதிகமானவர்கள் மரணித்து கொண்டிருக்கின்றார்கள். எனவே நாம் நம்மை பாதுகாக்க தவறினால் நமது வீடுகளில் இருக்கும் முதியோர்கள், குழந்தைகளின் நிலை என்ன என்பதை சிந்திக்க நேரிடும் என்பதை அவர் தெரிவித்துள்ளார்.