மாணிக்கக்கல் வியாபாரிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கவும் - அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பிரேரணை
தற்போது காணப்படும் தொற்றுநோய் நிலைமை காரணமாக நாடு முடக்கப்பட்டிருப்பதால் இரத்தினபுரி மாவட்ட சிறிய மாணிக்கக்கல் வியாபாரிகளின் அனைத்து விதமான வர்த்தக நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதால் அவர்கள் கஷ்டமான நிலைமைக்கு உள்ளாகியுள்ளதாக பெருமளவான வர்த்தகர்கள் எனது கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
அதனால் அவர்களுக்காக ஏதாவது சலுகை நடவடிக்கைகளை செயல்படுத்துமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கமைய சிறிய மாணிக்கக்கல் வியாபாரிகளுக்கு 25,000 ரூபாய் வட்டியில்லா கடன் ஒன்றை வழங்குவது பொருத்தமானது என தான் அரசாங்கத்துக்கு யோசனை ஒன்றை முன்வைத்துள்ளதாக நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.
இந்த யோசனையை இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில் மற்றும் சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அவர்களுக்கு சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தான் இந்த பிரேரணையை முன்வைத்ததாக இது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோது தெரிவித்தார்.