காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா காத்தான்குடி கிளை ஆகியன இணைந்து கண்டனம்

(ஆதிப் அஹமட் )

அண்மையில் நியூசிலாந்து நாட்டில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் அகில இலங்கை ஜம்மியத்துல்  உலமா காத்தான்குடி கிளை ஆகியன காத்தான்குடி மக்களின் சார்பிலும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகங்களின் சார்பிலும் வன்மையாக கண்டித்துள்ளன.

இதுதொடர்பில் அந்நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

செப்டபம்ர் 3,  2021 அன்று நியுஸிலாந்தின் ஒக்லாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள லைன் கவுண்டொளன் பேரங்காடியின் உள்ளே சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ எஸ் ஐ எஸ் அமைப்பின் கொள்கைகளை ஆதரிக்கும் போக்குடைய இலங்கைப் பிரஜை ஒருவர் பொது மக்களை கத்தியால் குத்தி காயப்படுத்திய கொடூரமான பயங்கரவாத சம்பவம் குறித்து அறிந்ததில் மிகுந்த அதிர்ச்சியும்  கடுமையான மனவேதனையும் அடைகிறோம்.

வெறுக்கத்தக்க மிலேச்சத்தனமான இப்பயங்கரவாதச் செயலை குறிப்பாக காத்தான்குடி மக்கள் சார்பாகவும், இலங்கை முஸ்லிம் சமுகம் சார்பிலும் எமது சம்மேளனமும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் காத்தான்குடி கிளையும் இணைந்து வன்மையாகக் கண்டிக்கிறோம். 

அதேவேளை இச்சம்பவம் தொடர்பில் உத்தியோகபூர்பமாக  அறிக்கை வெளியிட்ட நியுசிலாந்து பிரதமர் அதிமேதகு ஜெசின்ரா அட்றென் அவர்கள் கூறிய நேர்மையானதும்,  நடுநிலையானதுமான வார்த்தைகள் அர்த்தமிக்கவையும் மெச்சத்தக்கவையுமாகும். தாக்குதலைச் செய்தவர் ஒரு தனி நபர், அவர் செயலுக்கு அவர்மட்டுமே பொறுப்பாவார். தாக்குதல் சம்பவம் ஒரு மத நம்பிக்கையயியோ, குறிப்பிட்ட இனக்குழுவையோ, கலாசாரத்தையோ சாராது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். எமது கருத்து நிலையும் அதுசாந்த்தாகவே இருக்கிறது. நிச்சயமாக இத்தாக்குதலானது மிகப்பிழையானது, அருவருப்பான செயலும் கூட.  தீவிரவாதமும் பயங்கரவாதமும் அதன் எந்த வடிவிலும் ஏற்கத்தக்கதல்ல. எந்தவெரு இனமோ, மதமோ, கலாசாரமோ அதற்கு சார்பாகவோ பொறுப்பாகவோ இருக்கவும் முடியாது. இருக்கவும் கூடாது.

தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் , காயமடைந்தவர்கள் அவர்களது  குடும்பங்களின் வலியை நாமும் உணர்கிறோம். மனிதம் சார்ந்த உறவு நிலையில் இன,மத, தேச வேறுபாடுகளைக் கடந்து அவர்களுக்கான எமது ஆழந்த அனுதாபங்களையும் தெரிவிக்கிறோம்.

பலமுனை ஊடகங்கள் வாயிலாகவும், உள்ளூர் மட்ட அறிதல்கள் அடிப்படையிலும் நாம் அறிவது என்னவென்றால் இவ்வீனசெயலைப் புரிந்த பயங்கரவாதியும் அவரது குடும்பத்தினரும் நீண்ட நாட்களாக காத்தான்குடியில் இருக்கவில்லை. தொழில் , கல்வி மற்றும் இன்னபிற காரணங்களுக்காக ஊரைவிட்டு வெளியேறி நீண்ட காலமாக  வெளியில்தான் வாழ்ந்தனர். குறிப்பாக ஸ்தலத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்ட  குறிப்பிட்ட பயங்கரவாதி சிறிய வயதிலேயே ஊரை விட்டு வெளியேறியவர், உள்ளூர் சமூகதொடர்பறுந்த வராகவே  அவர் இருந்தார் என்றும் அறிகிறோம். இந்தப் பின்னணியை மையப்படுத்தி இந்நாட்டின் ஒரு இனத்தைக் கொச்சை படுத்துவதையும் ஓர் ஊரின் கண்ணியத்தை பங்கப்படுத்தும் வகையில் நடந்து கொள்வதையும் பொறுப்பு வாய்ந்த சிவில், மார்க்க அமைப்புக்கள் என்ற வகையில் நாம் கவலையுடன் - விசனத்துடன் நோக்குகின்றோம்.

இருந்த போதிலும்கூட, இம்மிருகத்தனமான செயலை வன்மையாகக் கண்டிக்கும் அதேவேளை,  நாங்கள் அனைவரும் இதனால் காயமுற்ற, பாதிப்புற்ற உங்கள் அனைவரோடும் மானசீகமா இணைந்திருக்கிறோம்  என்பதை எமதூர் மக்கள் சார்பில் எமது இவ்விணைந்த கண்டன அறிக்கை மூலமாகத்தெரிவிக்க விரும்புகிறோம். அத்தோடு மனிதத்தின் பொது எதிரியான வன்முறைத் தீவிரவாதம் மற்றும் மதப் பயங்கரவாதத்தினை ஒழிப்பதற்காக நியுஸிலாந்து அரசாங்கத்தோடும், அந்நாட்டு மக்களோடும் ஒன்றிணைகிறோம்.  மாத்திரமின்றி  எமது தாய் நாடான இலங்கையிலும் இவ்வபாயத்துக்கெதிராக  நாட்டின் தலைமைத்துவத்தோடும் ஒத்துழைக்கிறோம் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா காத்தான்குடி கிளை ஆகியன இணைந்து கண்டனம் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் அகில இலங்கை ஜம்மியத்துல்  உலமா காத்தான்குடி கிளை ஆகியன இணைந்து கண்டனம் Reviewed by Editor on September 05, 2021 Rating: 5