கொவிட் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய நாளை முதல் புதிய இடம்

கொவிட் 19 தொற்றினால் மரணிப்வர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு கிண்ணியா வட்டமடு கிராமத்தில் 10 ஏக்கர் அரச காணி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இக்காணியை கொவிட் 19 தொழில்நுட்ப குழு ஆய்வுகளை மேற்கொண்டு சிபாரிசு செய்ததையடுத்தே கொவிட் 19 செயலணியினாலும் சுகாதார அமைச்சினாலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை (6) முதல் வட்டமடு கிராம கொவிட் 19 விஷேட மையவாடியில் ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்படத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இம்மையவாடியில் சுமார் 4000 ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்படுவதற்கான இடவசதியுள்ளதாகவும் கிண்ணியா பிரதேச சபைத் தவிசாளர் கே.எம். நிஹார் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், 

தற்போது மையவாடிக்கான உட்கட்டமைப்பு வசதிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மையவாடிக்குள் 14 பாதைகள் அமைக்கும் பணிகள் இடம்பெறுகின்றன. மையவாடியைச் சூழ சுமார் 10 கிலோ மீற்றர் மதில் எழுப்பப்படவுள்ளது. மின்சார வசதிகள் மற்றும் ஜனாஸாக்களின் உறவினர்களுக்கான வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

கிழக்கு மாகாண இராணுவ தளபதி உட்பட கொவிட் செயலணி அதிகாரிகள் இம்மையவாடியை பார்வையிடவுள்ளனர். ஓட்டமாவடி மஜ்மா நகர் கொவிட் 19 மையவாடியின் நிலப்பரப்பு ஜனாஸாக்களினால் பூரணமாகியுள்ள நிலையில் கிண்ணியா வட்டமடு கிராம மையவாடியை துரிதமாக ஏற்பாடு செய்யும்படி கொவிட் செயலணி வேண்டிக் கொண்டதற்கிணங்க அதன் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன என்றார்.

இதேவேளை புத்தளம் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் கொவிட் 19 ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு காணிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் கொவிட் 19 செயலணியின் தொழில்நுட்ப குழு இது தொடர்பில் ஆய்வுகளை நடாத்தி வருவதாகவும் சுகாதார அமைச்சின் கொவிட் 19 ஒருங்கிணைப்பாளரும் தொழில்நுட்ப சேவைகள் இயக்குனருமான டாக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.


கொவிட் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய நாளை முதல் புதிய இடம் கொவிட் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய நாளை முதல் புதிய இடம் Reviewed by Editor on September 05, 2021 Rating: 5