(பைஷல் இஸ்மாயில்)
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள அலுவலர்களுக்கான இடமாற்றம் அமுல்படுத்தப்பட உள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.
கொவிட் -19 காரணமாக 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைமுறைப்படுத்தப்பட்ட இடமாற்றங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாகவும் இம்மாதம் செப்டம்பர் 21 ஆம் திகதிக்கு முன்னர் இடமாற்றம் வழங்கிய புதிய நிலையத்திற்கு சென்று தங்களின் கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை போன்ற பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக்கு இந்த இடமாற்றம் தொடர்பாக கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் 2021 ஆம் ஆண்டின் வருடாந்த இடமாற்ற சபையின் முடிவுகள் எமது இணையத்தளமான EP.gov.lk எனும் மாகாண சுகாதார சேவைகள் வலைப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் மேலும் தெரிவித்தார்.