(சலீம் றமீஸ்)
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி வழங்கும் நிகழ்வு இன்று (01) புதன்கிழமை பல்கலைக்கழக பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தற்போது நாட்டில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் பரவல் தாக்கத்தை தொடர்ந்து அரசினதும், சுகாதார துறையினதும் அறிவுறுத்தலின்படி தற்போது நாட்டில் எல்லாப்பாகத்திலும் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது. இதனடிப்படையிலேயே அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் ஊடாக இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நிகழ்வினை பல்கலைக்கழக நிருவாகம் ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 30 ஆம் திகதியன்று இதே இடத்தில் பல்கலைக்கழக உத்தியோகத்தர்களுக்கான முதலாவது கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் டாக்டர் அபூபக்கர் றமீஸ் , பதிவாளர் எச்.அப்துல் சத்தார் , அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.அகிலன், பிரதிப் பதிவாளர் பி.எம்.முபீன், சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எம். எச்.எம்.நபார் மற்றும் விரிவுரையாளர்கள், நிருவாக அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் உட்பட ஊழியர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.