ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 15ஆம் திகதி தேசிய உளநல தினம் எமது அரசினால் பிரகடனம் செய்யப்பட்டு உளவளத்துணைச் செயலகத்தினால் பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இவ்வருடம் "சமமற்ற உலகில் உள ஆரோக்கியம்" என்ற கருப்பொருளில் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
அதில் ஒரு அங்கமாக வெள்ளிக்கிழமை (15) நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்திப் அவர்களின் தலைமையில் உளவளத்துணை தின நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
உடல் உள ஆரோக்கியத்தின் அவசியம் குறித்தும் கால பொருத்தமான கருப்பொருள் என்பது குறித்தும் சிறப்பான தலைமை உரையை பிரதேச செயலாளர் நிகழ்த்தினார்கள்.
சமுர்த்தி வதிவிட பொருளாதாரம் நுண்நிதி சுய தொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய உளவளத்துணை செயலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய அவ் அமைச்சின் உளவளத்துணையாளர் ஏ.ஆர்.தஹ்லான் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் "சமமற்ற உலகில் உள ஆரோக்கியம்" பேணும் நுட்பம் குறித்து கருப்பொருள் விளக்க உரை ஒன்றும் அவரினால் நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக கிராம உத்தியோக்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வை உளவளத்துணை உத்தியோகத்தர் ஆர்.எம்.றனீஸ் ஒருங்கிணைப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.