கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட நிர்மானத்திற்கான இடப்பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வது தொடர்பான கள விஜயம் ஒன்றினை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மேற்கொண்டிருந்தார்.
இதுவரை காலமும் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட கற்கை நெறிக்காக உள்வாங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையினை எதிர்வரும் ஆண்டு முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ள நிலையில் அதற்கான புதிய விடுதிவசதிகள், ஒன்றுகூடல் மண்டபம் விரிவுரை மண்டபம் போன்றவற்றினை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மட்டக்களப்பு மண்றேசா பகுதியில் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு எழுந்துள்ள இடப்பற்றாக்குறை தொடர்பாக கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கிணங்க (01) வெள்ளிக்கிழமை அப் பகுதிக்கு விஜயம் செய்து பல்கலைக்கழக வளாகத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.
அதனடிப்படையில் குறித்த இடப்பற்றாக்குறையினை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பது தொடர்பான விசேட கலந்துரையாடலையும் மருத்துவபீட நிருவாகத்துடன் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் மேற்கொண்டிருந்தார்.
குறித்த இக்கள விஜயத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு. வாசுதேவன், கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி குழந்தை நல வைத்திய நிபுணர் அஞ்சலா அருட்பிரகாசம், சிரேஷ்ட விரிவுரையாளர்களான வைத்தியர் அருளானந்தம் மற்றும் மகப்பேற்று வைத்திய நிபுணர் மார்க்கண்டு திருக்குமார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Admin Ceylon East
on
October 03, 2021
Rating:


