வினைத்திறன் மிக்க சேவையாற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்க நடவடிக்கை - ஆளுநர்
பதுளை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தொழிற்துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடலொன்று ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் கெளரவ ஏ.ஜே.முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது பொதுச் சுகாதார பரிசோதகர்களின் பதவி உயர்வு, கொவிட் கடமைகளைச் செய்த பொதுச் சுகாதார பரிசோதகர்களின் போக்குவரத்துச் செலவுகள், இடமாற்றம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
மக்கள் நலம்கொண்ட வினைத்திறன் மிக்க பொதுச் சேவைக்காக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஆற்றும் சேவையைப் பாராட்டும் அதேவேளை, அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆளுநர் ஆலோசனை வழங்கினார்.
இக்கலந்துரையாடலில் ஊவா மாகாண பிரதான செயலாளர் P.B. விஜயரத்ன, ஆளுநரின் செயலாளர் எம்.எம். விஜயநாயக, மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் தயானந்த ரத்நாயக்க, பிரதி பிரதான செயலாளர் (நிதி) எம்.ஈ. சுமித்ரா சில்வா, பிரதி பிரதான செயலாளர் (திட்டமிடல்) ஆர்.எச்.சீ. பிரியந்தி உள்ளிட்ட பதுளை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.