இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகிரா சுகியாமாவுக்கு கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (25) திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் பிரியாவிடை மதியபோசன விருந்துபசாரமளித்தார்.
இலங்கை – ஜப்பான் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவரும், பெருந்தோட்டத்துறை அமைச்சருமான வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரண, இலங்கைக்கான பிரதி ஜப்பானியத் தூதுவர் கட்சுஹி கட்டாரோ, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்துவதற்கு ஜப்பானியத் தூதுவர் சுகியாமா தனது பதவிக்காலத்தில் வழங்கிய ஒத்துழைப்புக்களுக்கு சபாநாயகர் நன்றியைத் தெரிவித்தார். இக்கட்டான சூழ்நிலைகளில் இலங்கைக்கு ஆதரவாக நின்ற ஜப்பானிய அரசாங்கத்துக்கும், அந்நாட்டு மக்களுக்கும் சபாநாயகர் நன்றி தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மீண்டும் வலியுறுத்திய வைத்திய கலாநிதி பத்திரன, கொவிட்-19 மூன்றாவது அலைத் தாக்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஜப்பான் அரசாங்கம் அஸ்ராசெனிகா தடுப்பூசிகளை வழங்கி ஒத்துழைத்தமையைப் பாராட்டினார்.