“டொக்டர் எனது மனைவிக்கு தாய்ப்பால் வருவது குறைவு போல பிள்ளை எப்பொழுதும் அழுது கொண்டிருக்கிறான் என்ன பால்மா கொடுக்கலாம்?”
இது வழமையாக என்னிடம் பலர் கேட்கும் கேள்வி!
இன்றைய நவீன காலத்தில் இந்தக் கேள்வி ஒருவர் மனதில் தோன்றுவது ஒன்றும் புதிரான விடயமல்ல. எனவே தாய்ப்பாலின் சிறப்பு பற்றி இந்த கட்டுரையில் ஆராயலாம் என்று நினைக்கிறேன்.
பிறந்த சிசுவானது தாய்ப்பாலைத் தாயிடமிருந்து பெறுவதற்கான அனைத்து உரிமைகளுக்கும் உரியதாகின்றது. இது உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நடைமுறையாகும்.
எனவே தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முதல் ஆறு மாத காலத்துக்கு தாய்ப்பாலை மட்டுமே உணவாகக் கொடுத்தல் வேண்டும்.
மேலும் கண்டிப்பாக ஆறு (6) மாத முடிவில் தாய்ப்பாலுடன் சேர்த்து திண்ம உணவுகளையும் ஆரம்பித்தல் வேண்டும். இங்கு சிலவேளைகளில் வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகள் நான்கு (4) மாத முடிவில் தாய்ப்பாலுடன் திண்ம உணவுகளை தொடங்கலாம்.
தாய்ப்பால் குழந்தைக்கு முதல் ஆறு மாதத்துக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றது. குழந்தை பிறந்ததும் முதல் 3 தொடக்கம் 5 நாட்களுக்குள் சுரக்கப்படும் பாலானது கொலஸ்ட்ரம் என அழைக்கப்படும். அது அளவில் சிறியதாகவும், மஞ்சள் நிறத்திலும் இருந்தாலும் குழந்தைக்கு தேவையான அளவு பாலை கொண்டிருக்கும், குறிப்பாக புதிதாகப் பிறந்த சிசுவின் நிர்ப்பீடனத் தொகுதியை மேம்படுத்துவதற்கு அது உதவும்.
இன்று இலங்கையில் பெரும்பாலான தாய்மார்கள் தங்களது குழந்தைக்கு தாய்ப்பாலே முதன்மையான உணவாகக் கொடுக்கின்றனர் என்பது உண்மையிலேயே நாம் பெருமைப்படக் கூடிய விடயமாகும்.
தாய்ப்பால் ஊட்டுவதால் ஏற்படும் நன்மைகள்
தாய்ப்பால் ஊட்டுவதால் குழந்தைக்கும் தாய்க்கும் பல நன்மைகள் ஏற்படும். முக்கியமாக குழந்தைக்கு உகந்த ஊட்டச்சத்தும் வளர்ச்சிக்குமான அனைத்து அம்சங்களும் தாய்ப்பாலில் அடங்கியுள்ளது, குறிப்பாக மூளை வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்று ஆராய்ச்சிகள் உறுதி செய்துள்ளன.
மேலும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியானது தாய்ப்பாலூட்டல் மூலம் வழங்கப்படுகின்றது. அதாவது தாயிடம் இருக்கும் அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியானது குழந்தைக்கு நேரடியாக கொடுக்கப்படுகின்றது, இதனால் வாந்திபேதி, சுவாச சம்பந்தமான நோய்கள் மற்றும் ஏனைய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைக்கப்படுகின்றது. குறிப்பாக குழந்தை பிறந்த பின் முதல் 3 தொடக்கம் 5 நாட்களில் வரும் பாலானது (கொலஸ்ட்ரம்) எதிர்ப்பு சக்தி சக்தியை சிசுவுக்கு அதிகரிக்கும்.
மேலும் தாய்ப்பாலூட்டல் ஆனது குழந்தைகளுக்கு ஆஸ்துமா, ஒவ்வாமை, புற்றுநோய்கள், நீரழிவு மற்றும் அதிக உடல் பருமன் போன்ற நோய்களிலிருந்து தடுக்கின்றது.
தாய்ப்பாலானது குழந்தையால் இலகுவாக அகத்துறிஞ்சப்பட கூடியதாக உள்ளதால் இதுவே முதல் ஆறு மாத காலத்திற்கு குழந்தைக்குரிய சிறப்பான போசாக்கு ஆகும்.
தாய்ப்பால் ஊட்டுவதால் தாய்மாருக்கு மார்பக புற்றுநோய், சூலகப் புற்றுநோய், நீரிழிவு மற்றும் குழந்தை பிறப்பின் பின் ஏற்படும் மன உளைச்சலில் இருந்து பாதுகாக்கின்றது.
அதை விட முக்கியமாக தாய்க்கும் சேய்க்கும் இடையில் ஒரு உணர்வு மிக்க பிணைப்பை இது ஏற்படுத்துகிறது.
தாய்ப்பால் கொடுக்கும் சரியான முறைகள்
தாய்ப்பால் ஊட்டுவது ஒரு இயற்கையான விடயம் என்றாலும் அதை சரியான முறையில் கொடுக்காத போது சிலவேளைகளில் அந்த முயற்சி தோல்வி அடையலாம். குறிப்பாக தங்களது முதல் குழந்தைக்கு பாலூட்டும் தாய்மாருக்கு அது ஒரு சவாலான விடயமே.
உண்மையில் தாய்மாருக்கு, தாய்ப்பாலின் சிறப்பு பற்றியும் அதன் தேவையையும் கர்ப்ப காலத்தில் இருந்தே போதித்தல் வேண்டும்.
தாய்ப்பாலூட்டல் ஆனது வெற்றி பெறுவதற்கு முறையான இணைப்பும் நிலைப்படுத்தலும் முக்கியமானதாகும்.
இதில் சிக்கல்கள் உள்ள தாய்மார்கள் வைத்தியசாலையில் உள்ள தாய்ப்பாலூட்டல் முகாமைத்துவ நிலையங்களிலோ அல்லது தங்களது midwife இடமோ கேட்டு அறிந்து கொள்ளலாம்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாய்ப்பால் முகாமைத்துவ நிலைய தொலைபேசி இலக்கம் 065 2222261 – 162
ஏற்கனவே தாய்ப்பால் கொடுத்து அனுபவம் உள்ள தாய்மாருடன் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதனால் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.
எப்பொழுதெல்லாம் தாய்ப்பால் கொடுப்பது?
தாய்ப்பால் ஒரு நிறையுணவு என்பதால் குழந்தைக்கு பசி எடுக்கும் போது தாய்ப்பாலை கொடுக்க வேண்டும். குழந்தை பசியுடன் இருப்பது என்பதை பின்வரும் காரணிகளை வைத்து அறிந்து கொள்ளலாம்.
1. குழந்தை நித்திரையில் இருந்து எழும்பி, கண்ணைத் திறந்து, விழிப்பாக இருந்து வாயை அகலத் திறந்து கொட்டாவி விடும் போது.
2. குழந்தை தனது கையை மடித்து வாயில் வைத்து உறிஞ்சும்போது.
3. மேற்கூறிய அறிகுறிகளை அவதானிக்க தவறும் போது குழந்தை பசியால் அழும்.
குறிப்பாக இங்கு தாய்மார்கள் கவனிக்க வேண்டியது குழந்தை தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்கள் தூங்கும் ஆயின் குழந்தையை எழுப்பி தாய்ப்பால் ஊட்ட வேண்டும், முக்கியமாக இரவு வேளைகளில்.
குழந்தை போதுமான அளவு தாய்ப்பால் குடித்துள்ளது என்று அறிவது எப்படி?
குழந்தை போதுமான அளவு தாய்ப்பால் குடித்த பின்பு அது மார்பகத்திலிருந்து தானாகவே வாயை எடுக்கும். இங்கு குழந்தை தாய்ப்பால் குடிக்கும் நேரம் ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடும்.
நன்றாக தாய்ப்பால் குடித்த குழந்தை மகிழ்ச்சியாக தாயுடன் விளையாடும் மற்றும் நன்றாக தூங்கிவிடும்.
தாய்ப்பால் கொடுக்கும் போது தாய்மாருக்கு மார்பகத்தின் பாரம் குறைவது போன்ற உணர்வு ஏற்படும் மேலும் மற்றைய மார்பகத்திலிருந்து சிறிதளவு பால் வெளியேறும். இவையெல்லாம் தாய்ப்பாலூட்டல் வெற்றிகரமாக நடைபெறுகிறது என்பதற்குரிய அறிகுறிகள் ஆகும்.
தாய்ப்பால் ஊட்டும் போது குழந்தைக்கு தண்ணீர் கொடுக்க வேண்டுமா?
தாய்ப்பாலானது குழந்தைக்குத் தேவையான எல்லா ஊட்டச் சத்துக்களையும் கனியுப்புக்களையும் கொண்டிருப்பதால் முதல் ஆறு மாத காலத்துக்கு குழந்தைக்கு தாய்ப்பாலுடன் வேறு எதையும் (தண்ணீர் உட்பட) கொடுக்கத் தேவையில்லை
தாய்ப்பாலுக்குப் பதிலாக பால்மா வகைகளை குழந்தைக்கு கொடுப்பதால் ஏற்படும் பாதிப்புகள்!
பால்மா கொடுப்பதால் தாய்க்கும் குழந்தைக்கும் இடையான உணர்வுபூர்வமான இணைப்பில் பாதிப்புகள் ஏற்படும். மேலும் குழந்தையானது அடிக்கடி வாந்திபேதி, சுவாச நோய்கள், காது நோய்கள் போன்ற தொற்று நோய்க்கு உட்படும். குறைந்தளவான மற்றும் அதிகளவு ஐதாக்கப்பட்ட பால்மா மூலம் குழந்தைக்கு மந்த போசனை ஏற்படலாம் அல்லது அதிகளவு பால் கொடுப்பதால் உடல் பருமன் அதிகரித்து அதன் மூலம் பிற்காலத்தில் பாரிய பிரச்சினைகள் ஏற்படலாம். ஒவ்வாமை, ஆஸ்துமா போன்ற நோய்கள் அதிக அளவு ஏற்படும். குழந்தையின் புத்திக் கூர்மையில் பாதிப்புக்கள் ஏற்படலாம். முக்கியமாக பெற்றோர்களுக்கு மேலதிக செலவீனங்களை ஏற்படுத்தும்.
பொதுவான மூடநம்பிக்கைகள்
தாய்மார் நோய்வாய் பட்டிருக்கும் போது தாய்ப்பால் ஊட்டக் கூடாது! அவ்வாறு இல்லை தாய்மார் நோயுற்றிருக்கும் போதும் தாய்ப்பாலூட்டலாம்.
மார்பகங்கள் வீக்கம் அடைந்து இருக்கும் போது தாய்ப்பால் ஊட்ட கூடாது! மார்பகங்கள் வீக்கம் அடைந்தால் கண்டிப்பாக பாலூட்ட வேண்டும் அவ்வாறு இல்லையாயின் மார்பகத்தில் சிதழ் கட்டிகள் ஏற்படலாம்.
அதிக வெப்பமான காலங்களில் தாய்ப்பாலுடன் சேர்த்து தண்ணீரும் கொடுத்தல் வேண்டும்! இல்லை தாய்ப்பாலானது போதியளவு நீரை கொண்டுள்ளது.
தாய்ப்பால் கொடுப்பதால் எனது உடல் கட்டமைப்பு பாதிப்படையும்! இல்லை தாய்ப்பால் கொடுப்பது கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட மேலதிக உடல் பருமனை குறைக்க உதவும்.
சிறிய மார்பகங்கள் உடைய தாய்மார் மற்றும் முலைக்காம்பு தட்டையாக உள்ள தாய்மார் பாலூட்டுவது கடினம்! அவ்வாறு இல்லை குழந்தையானது எந்த வகையான மார்பகத்திலும் தாய்ப்பால் குடிக்க இசைவாக்கம் அடைந்தது.
எனவே இவ்வாறான மகிமைகளை கொண்ட தாய்ப்பாலை தங்களது குழந்தைக்கு கொடுப்பதை உறுதி செய்வதன் மூலம் வளமானதும் புத்தி கூர்மையும் உடைய சமுதாயத்தை உருவாக்குவோம்!!
குழந்தை நல வைத்திய நிபுணர்
போதனா வைத்தியசாலை மட்டக்களப்பு