(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று பிரதேசத்தில் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினால் மேற்கொள்ளப்படும் டெங்கு நுளம்பு பரவும் இடங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் அடிப்படையில் பதுர் நகர் பகுதியில், சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ.காதர் அவர்களின் வழிகாட்டலில் இன்று (21) வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நடவடிக்கையில், அக்கரைப்பற்று மாநகர திண்ம கழிவகற்றல் பிரிவு, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், டெங்கு கட்டுப்பாட்டு கள உதவியாளர்கள், நகரப்பிரிவு -05 கிராம உத்தியோகத்தர், வட்டார உறுப்பினர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து இந்த செயற்பாட்டை முன்னெடுத்தனர்.
இப்பகுதியில் உள்ள பாழடைந்த வீடுகள், வெற்றுக் காணிகள், குடியிருப்பு வீடுகள், நீரோடைகள் மற்றும் பொது இடங்களில் உள்ள டெங்கு பரவக்கூடிய இடங்களை சுத்தம் செய்து, இது தொடர்பில் பொது மக்களுக்கு அறிவுறுத்தல்களும் வழங்கி வைக்கப்பட்டது.
அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தொடர்ச்சியாக டெங்கு நோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்தும் முகமாக டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.