காத்தான்குடி அறிவிப்பாளர்கள் போரம் மற்றும் பிரதேச செயலகம் ஆகியன இணைந்து ஏற்பாட்டிலும் சாய்ந்தமருது ஏ.எஸ்.எம்.ஷம்சுதீன் ஆலிம் கலை கலாசார ஊடக சமூக மேம்பாட்டுக்கான அமைப்பின் பிரதான அனுசரணையில் பாடசாலை மாணவர்களுக்கான இலத்திரனியல் ஊடகங்களில் நிகழ்ச்சி தொகுப்பு மற்றும் தயாரிப்பு,மொழிப் பிரயோகம் தொடர்பிலான கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை (28) காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் அஷ்ஷஹீட் ஏ.அஹ்மது லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.
இக் கருத்தரங்கில் இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபன அறிவிப்பாளர் ஏ.எல்.எம்.சினாஸ், சிரேஷ்ட ஒலிபரப்பாளர் ஏ.எல் .அன்ஸார் , கலாபூஷணம் மெளலவி பெளஸ் (ஷர்கி) ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு இலத்திரனியல் ஊடகங்களில் நிகழ்சி தயாரிப்பு மற்றும் தொகுப்பு, நேர்முகத்தேர்வுக்கு முகம்கொடுத்தல், மொழி உச்சரிப்பு போன்ற விடயங்களை மாணவர்களுக்கு சிறப்பாக வழங்கியதுடன் பிறை வானொலியின் பிரதிப் பணிப்பாளரும் சிரேஷ்ட அறிவிப்பாளருமான பஷீர் அப்துல் கையூம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மாணவர்களுக்கு தனது ஊடக அனுபவம் மற்றும் எதிர்நோக்கிய சாவல்கள், கையாளப்பட வேண்டிய நுணுக்கங்கள் தொடர்பிலும் ஆலோசனைகளை வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் மெளலவி எம்.ஐ.ஆதம்லெப்பை (பலாஹி), பிரதேச கல்விப் பணிப்பாளர் எம்.எம்.கலாவுதீன், போரத்தின் ஆலோசகர் எம்.சீ.எம்.ஏ.சத்தார், கலாபூஷணம் ஆரையூர் அருளம்பலம், பெளசிஸ் நிறுவன உரிமையாளர் எம்.பஸீல் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டதுடன் போரத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வுக்கு லக்ஸ்டோ ஊடக வலையமைப்பு மற்றும் TM NEWS ஆகியன ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.