மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக நடராஜா சிவலிங்கம் இன்று (15) புதன்கிழமை மாநகர சபையில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கை நிருவாக சேவையின் முதல்தர வகுப்பைச் சேர்ந்த நடராஜ சிவலிங்கம் நீண்டகால சேவை அனுபவத்தினைக் கொண்டவர்.
கமநல சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராக அம்பாரை, மன்னார், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் கடமையாற்றியுள்ள இவர், 2013ம் ஆண்டு தொடக்கம் கமநலசேவைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் 6 ஆண்டுகள் சேவை புரிந்துள்ளார்.
மேலும் உலக வங்கியின் விசேட வேலைத்திட்டமாகிய காலநிலைக்கு சீரமைவான நீர்பாசன விவசாயத்திட்டத்தின் திட்ட பணிப்பாளராக 2 ஆண்டுகள் கடமையாற்றியுள்ளதுடன், கமநல சேவை திணைக்களத்தின் தலைமைக்காரியாலயத்தில் ஆணையாராகவும் அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சபையின் மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
இந்நிகழ்வில் மாநகர மேயர் தியாகராஜா சரவணபவான் உள்ளிட்ட சபை உறுப்பினர்கள், பிரதி ஆணையாளர் உதயகுமார் சிவராஜா மற்றும் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.