திகாமடுல்ல மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்களுக்கும் மலேசியா நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் அதிமேதகு ஜங் தாய் டன் அவர்களுக்கும் இடையான சிநேக பூர்வமான சந்திப்பு, மலேசியா உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (06) இடம்பெற்றது.
65 ஆண்டுகள் பூர்த்தியை நெருங்கும் மலேசியா மற்றும் இலங்கை நட்புறவு தொடர்பான விடயங்கள் பற்றி அளவளாவியதோடு, மலேசிய நாட்டின் உல்லாசப் பயணத்துறை வளர்ச்சி மற்றும் உற்பத்தித்துறை அபிவிருத்தி மற்றும் பெருந்தொற்றுக் காலப்பகுதியில் இருநாடுகளினதும் பரஸ்பர பொருளாதார முன்னெடுப்புகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன.
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் வெளிநாட்டு முதலீடுகளின் சாத்தியப்பாடுகள் பற்றியும் மலேசியா நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் அதிமேதகு ஜங் தாய் டன் அவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.