மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 3 தினங்களில் பெய்த அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் 227 குடும்பங்களைச் சேர்ந்த 842 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மட்டக்களப்பு மாவட்ட ஊடக மத்திய நிலையம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த 3 ஆந் திகதி பெய்த மழையினால் 183 குடும்பங்களைச் சேர்ந்த 692 பேரும், 4 ஆந்திகதி பெய்த மழையினால் 25 குடும்பங்களைச் சேர்ந்த 84 பேரும், 5ஆந் திகதி பெய்த மழையினால் 19 குடும்பங்களைச் சேர்ந்த 66 பேருமாக மொத்தம் 842 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவற்றில் ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவில் 9 கிராம சேவகர் பிரிவுகளும், மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் 5 கிராம சேவகர் பிரிவுகளும், போரதீவுப்பற்று வெள்ளவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 4 கிராமசேவகர் பிரிவுகளும், மணமுனைப் பற்று ஆரையம்பதி மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த தலா1 கிராம சேவகர் பிரிவுகளும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
இப்பிரதேசங்களில் பகுதி அளவான வீடு சேதம் ஒன்றும், அடிப்படைக் கட்டமைப்பு பாதிப்பு ஒன்றும் பதிவாகியுள்ளதாக தேசிய அணர்த்த நிவாரண சேவை நிலையம் தெரிவித்துள்ளது.