கண்டி – இரண்டாவது ராஜசிங்க மாவத்தையிலுள்ள நட்சத்திர விடுதியில் குளிரூட்டிக்கான வாயு (A/C GAS) வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (04) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ஹோட்டலிலுள்ள குளிரூட்டிக்கான வாயு திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த மாத்தளை – வரகாமுர பகுதியைச் சேர்ந்த 23 வயதான மொஹமட் ஹிஷாம் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
வெடிப்பு சம்பவத்தில் தீக்காயங்களுக்கு உள்ளான இளைஞன், பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் ஹோட்டலில் பணிப்புரியும் ஊழியர் இல்லை எனவும் ஹோட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது. குளிரூட்டி வாயு திருத்தப்பணிகள் வெளி நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்த நிறுவனத்தில் பணிப்புரியும் ஊழியரே இவராவார்.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.