(றிஸ்வான் சாலிஹு)
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் கீழுள்ள 31 பிராந்திய முகாமையாளர் காரியாலயங்களுக்கு 2021ஆம் ஆண்டில் தலைமைக்காரியாலயத்தால் வழங்கப்பட்ட "நீர்க்கட்டணம் அறவிடல்" செயற்பாட்டு தரப்படுத்தலில் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் காரியாலயம் தேசிய ரீதியில் முதலாம் இடத்தையும், புதிய நீரிணைப்பு வழங்குதலில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளது.
இச்சாதனையை பெற்ற அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயத்திற்கான பாராட்டு சான்றிதழ், நேற்று (03) திங்கட்கிழமை இரத்மலானையிலுள்ள சபையின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற வருடத்தின் முதல் நாள் கடமைகளை ஆரம்பிக்கும் அரச சேவை உறுதியுரை நிகழ்வில், நீர் வழங்கல் அமைச்சர் கெளரவ வாசுதேவ நாணயக்கார அவர்களினால் அக்கரைப்பற்று முகாமையாளர் பொறியியலாளர் யூ.கே.எம்.முஸாஜித் அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.
தேசிய ரீதியிலான இந்த உயரிய சாதனையை பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிராந்தியத்தின் சகல துறைகளையும் சேர்ந்த உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றியை தெரிவிப்பதாக முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்று, பொத்துவில், திருக்கோயில், இறக்காமம், அட்டாளைச்சேனை, ஒலுவில்-பாலமுனை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை மற்றும் மருதமுனை ஆகிய பிரதேசங்களை உள்ளடங்கிய பிராந்தியமே அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் காரியாலயம் என்பது குறிப்பிடத்தக்கது.
(முகாமையாளர் பொறியியலாளர் யூ.கே.எம்.முஸாஜித் அவர்களின் அருகாமையில் நீர்வழங்கல் சபையின் தவிசாளர் திரு.நிசாந்த ரணதுங்க காணப்படுகிறார்)