நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதா? அல்லது வேறு ஏதுவும் முறையான தீர்வு உள்ளதா என்பதை பெப்ரவரி மாதத்திற்குள் அரசாங்கம் பாராளுமன்றுக்கு அறிவிக்க வேண்டும்.அத்துடன் பாராளுமன்றம் பலமானதாக இருக்க வேண்டும் என்பதால் தேர்தல் மூலமே தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (20) வியாழக்கிழமை நடைபெற்ற, ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் முன்னர் ஜீ.எஸ்.டி மற்றும் வற் வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் ஒரே பொருட்கள் சேவைகள் மீது அறவிடுகின்றனர். ஏதாவது ஒன்றையே அறவிட வேண்டும். அதேவேளை அனைத்து வரிகளையும் அரச வருமான வரித் திணைக்களமே அறவிட வேண்டும். ஆனால் இப்போது நிதி அமைச்சு அதனை அறவிடுவது ஏன்?
இன்று பொருளாதாரத்தைப் பார்த்தால் பாரிய நெருக்கடிகள் உள்ளன. சிறிய வர்த்தகர்கள், குறைந்த வருமானம் உடையவர்களே இதனால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் அரச கடனை பார்த்தால் 2019 ஆம் ஆண்டில் 13,000 பில்லியன் ரூபாவாக இருந்தது. ஆனால் 2021 ஜனவரி முதல் செப்டம்பர் வரையில் அது 17,000 பில்லியனாக அதிகரித்துள்ளது. இரண்டு வருடங்களில் எவ்வாறு 4 டிரில்லியனால் அதிகரித்தது என்று கேட்கின்றோம். இந்த இடத்தில் பிரச்சினைகளைப் பார்க்க முடிகின்றது. அதேபோன்று மொத்த தேசிய உற்பத்தியில் 10 வீதம் கடனாக இருக்கின்றது.
இதேவேளை அந்நியச் செலாவணி மூலம் கடனுக்காக எதிர்வரும் 6 வருடங்களுக்கு ஒவ்வொரு வருடத்திற்கும் 6 பில்லியன் டொலரை செலுத்த வேண்டியுள்ளது.
பெப்ரவரி மாதத்துக்கு முன்னர் இது தொடர்பில் நிதி அமைச்சர் அறிவிக்க வேண்டும். நாங்கள் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா? அல்லது ஏற்றுக்கொள்ளக் கூடிய மாற்று வழிகளுக்குச் செல்வதா? என்று கேட்கின்றேன். இந்தப் பிரச்சினையைத் தொடர விட முடியாது. இது தொடர்பாக அமைச்சரவையும் தீர்மானத்தை எடுத்து இந்தப் பாராளுமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும்.
பல வருடங்களாக இருந்த முறைமைகளை நீக்கியமை யால் டொலர் நெருக்கடிகள் ஏற்பட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இலங்கை மீதான நம்பிக்கை இல்லாது போயுள்ளது. இதற்கு குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்ட காலத் தீர்வுகள் வேண்டும்.
இந்த வீழ்ச்சிக்கு கொவிட் பரவலை காரணமாகக் கூற முடியாது. எங்களைச் சூழவுள்ள நாடுகளில் கொவிட் இருந்தாலும் அங்கு அந்நியச் செலாவணியில் வீழ்ச்சி ஏற்படவில்லை. கடன்கள் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தீர்வாக அமையாது.
இந்தச் சபையில் அரசாங்கத்தை பாதுகாப்பதற்கோ, அரசாங்கத்தை வீழ்த்துவதற்கோ எங்களுக்கு தேவைகள் கிடையாது. விழுந்த மக்களை மீண்டும் பாதுகாக்க வேண்டும். இந்த நாட்டின் எதிர்காலம் தொடர்பாக நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
எமது நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து 100 வருடங்கள் ஆகின்றன. நாங்கள் இன்னும் விழுவதா? அல்லது முன்னால் செல்வதா? என்று சிந்தித்து திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். சம்பிரதாய அரசியல்கள் மூலம் நெருக்கடியில் இருந்து மீள முடியாது. நாங்கள் அரசியல் இறுதிக்கட்டத்திற்கே நாங்கள் வந்துள்ளோம். இந்தப் பாராளுமன்றம் பலமானதாக இருக்க வேண்டும்.
இதற்கான புதிய பாதையைத் தேட வேண்டும். நாம் எல்லோரும் ஒன்றிணைந்து அதனை அமைப்போம். அதற்காக தேர்தலுக்கு சென்று யாருக்கு இதில் அதிகளவுக்கு செயற்படுத்த முடியுமென்று பார்க்கலாம்.
நன்றி - தினக்குரல்
- முகப்பு
- உள்நாட்டு
- வெளிநாட்டு
- விளையாட்டு
- வணிகம்
- தொழிநுட்பம்
- வேலைவாய்ப்புக்கள்
- கல்வியியல்
- சமயம்
- அரசியல்
- குற்றவியல்
- குற்றம்
- RIP
- ACCIDENT
- CeylonEast TV
-
Oops. Something went wrong. Please try again later
© 2020 ceyloneast. All rights reserved.