அரச உத்தியோகத்தர்களின் மொழித்துறையை விருத்தி செய்யும் நோக்கில் அரச மொழிகள் திணைக்களத்தினால் மொழிப்பயிற்சிகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றது.
இதனடிப்படையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலகங்களில் தமிழ்மொழி மூலம் கடமை புரியும் உத்தியோகத்தர்களின் சிங்கள மொழித்துறையை விருத்தி செய்யும் நோக்கில் அரச மொழிகள் திணைக்களத்தினால் (150 மணித்தியாலயம்) சிங்களப்பயிற்சியைப் பூர்த்தி செய்த கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஓட்டமாவடி அந்-நூர் மண்டபத்தில் இடம்பெற்றது.
மொழித்திணைக்களத்தின் போதனாசிரியர் எம்.எம்.செயினுதீன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், அதிதிகளாக கிழக்கு பல்கலைக் கழகத்தின் ஆங்கில மொழிப்பிரிவு சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.உமாசங்கர், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில், வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எம்.லஸந்த பண்டார, மொழித்திணைக்களத்தின் கிழக்கு பிராந்திய இணைப்பாளர் செல்வி ஜே.பி.பல்லவி, பாடநெறியின் பிரதேச செயலக இணைப்பாளர் பி.எம்.எம்.றாஸித், மொழித்திணைக்களத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
ஓட்டமாவடி, வாழைச்சேனை மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலகங்களைச்சேர்ந்த 48 உத்தியோகத்தர்கள் இப்பாடநெறியைப் பூர்த்தி செய்துள்ளதுடன், அவர்களது கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதுடன், அதிதிகளுக்கு ஏற்பாட்டாளர்களால் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.