அதிமேதகு ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ் எமது நாட்டில் டெங்கு நுளம்பு பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுவருகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் டெங்கு நுளம்பு பரவுவதை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம் மாவட்ட செயலகத்தில் இன்று (24) வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் உள்ளுராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளரின் வழி காட்டுதலின் கீழ் இவ் நிகழ்வு இடம் பெறுவதுடன், நாடளாவிய ரீதியாக டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை கண்டறிந்து அவற்றை துரிதமாக இல்லாதொழிக்கும் நோக்கில் மாவட்டச் செயலக வளாகத்தினுள்ளும் டெங்கு ஒழிப்பு சிரமதான செயற்பாடுகள் நடைபெற்றுவருகிறது . இச்சிரமதான செயற்பாடுகளை மாதத்தின் இரண்டாம் மற்றும் இறுதி வார வியாழக்கிழமைகளில் தொடர்ச்சியாக நடைமுறைபடுத்துவதன் மூலம் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்தமுடியும்.
மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்கள் கிளைகள் ரிதியாக ஒதுக்கப்பட்ட இடங்களில் டெங்கு பெருகும் அபாயம் உள்ள இடங்கள் என இனங்கானப்பட்ட இடங்களை சிரமதானத்தின் மூலம் இல்லாதொழித்ததுடன், மிகுந்த உற்சாகத்துடன் சிரமதானம் மேற்கொண்டதுடன், உத்தியோகத்தர்கள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கிவருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மட்டக்களப்பு மாவட்டம் டெங்கு நோய் அபாயவலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், இவ்வாறான சிரமதானப்பணிகள் பொது இடங்களில் மேற்கொள்ளுவதன் மூலம் எமது மாவட்டத்தில் இருந்து டெங்கு நோயினை கட்டுப்படுத்த முடியும்.
(மாவட்ட ஊடாக மத்திய நிலையம்)