அமைதியான பொதுவான மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கான உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் அதனை ஆழ்ந்து சிந்திக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன மற்றும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஆகியோரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமைதியான, அகிம்சை வழியிலான போராட்டங்களை ஒடுக்குவதற்கான உத்தரவுகளை நிறைவேற்றுவதற்கு முன், பாதுகாப்புச் செயலாளரும், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியும் பல லட்சம் தடவைகள் சிந்திக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தனது முகநூல் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
“எனக்குக் கீழ் ஒரு மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுத்த வீரமிக்க போர் வீரர்கள் ஆகிய நீங்கள் முழு உலகத்தின் முன் அவமதிப்பு மற்றும் அவமானப்படுத்தப்படுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
எனவே, ஊழல் ஆட்சியாளர்களால் பிறப்பிக்கப்படும் மக்கள் விரோத, சட்ட விரோதமான உத்தரவுகளை அமல்படுத்துவதற்கு முன், பல்லாயிரம் முறை யோசிக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்,'' என்று சரத் பொன்சேகா தனது முகநூல் பதிவில் பதிவிட்டுள்ளார்.
