சவால்களை எதிர்கொண்டு முன்னேற்ற பாதையில் முன்செல்லும் மாணவர் சமுதாயத்தினை உருவாக்க பிராத்திப்போம் - முதல்வர் அஹமட் ஸகி
(றிஸ்வான் சாலிஹு)
சமகாலத்தில் நாட்டில் பல்வேறு அசாதாரண இடையூறுகளுக்கு மத்தியில் க.பொ. த. சாதாரண பரீட்சைக்கு தோற்றும் சகல மாணவர்களுக்கும் எமது மானசீக பிரார்த்தனைகளுடன் கூடிய வாழ்த்துக்கள் நிறைந்திருப்பதாக கௌரவ மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி தெரிவித்துள்ளார்.
கௌரவ மாநகர முதல்வரின் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;
அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் நலிவுற்றிருக்கும் நாட்டில் கல்வி சார் செயற்பாடுகளில் மாணவர்களும் பல்வேறு பின்னடைவுகளை சந்தித்திருக்கும் இச்சூழ்நிலையில் சவால்மிக்க தீர்க்கமான பரீட்சையொன்றினை எமது செல்வங்கள் எதிர்நோக்கி இருக்கின்றனர்.
கடந்த காலங்களில் இலங்கையின் துயர் நிறைந்த வரலாறு நெடுகவும், மாணவர்களின் கல்வியியல் நடவடிக்கைகளில் பற்பல கோணங்களில் தடைகள் ஏற்படினும், கல்வி மீதான தீராத பற்றுறுதி வேட்கையும், சவால்களை எதிர்கொண்டு முன்னேற்ற பாதையில் முன் செல்லும் நெஞ்சுரமும், இறை அன்பும், ஒழுக்கவியல் பண்பாடுகளும் மீண்டும் நமது மாணவர் சமுதாயத்தினை கல்வியியல் பெறுபேற்று அடைவுகளில் தூக்கி நிறுத்தும் எனும் பெருத்த எதிர்பார்ப்பு எமக்குண்டு.
எனவே, நாளை (23) க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் அக்கரைப்பற்று கல்வி வலய மாணவர்கள் உள்ளிட்ட நாடு தழுவிய ரீதியிலான அனைத்து மாணவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும்,பிரார்த்தனைகளும் உரித்தாகும் என கௌரவ மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Reviewed by Editor
on
May 22, 2022
Rating:
