பொதுச் சொத்துக்களை அமானிதங்களாக பாதுகாப்போம் - அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர்

அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட அம்பாறை பிரதான வீதியில் பள்ளிகுடியிருப்புக்கும் ஆலிம் நகருக்கும் இடைப்பட்ட இடங்களில் யானைக் கூட்டங்களின் வருகையும், பிரயாணம் செய்கின்ற பொதுமக்களின் அசௌகரியமும், இரவு நேரங்களில் வேலை செய்கின்ற விவசாயிகளின் அத்தியாவசிய தேவையும் கருதி பெறுமதி வாய்ந்த சூரிய சக்தியில் இயங்குகின்ற மின்விளக்குகள் அண்மையில் பொருத்தப்பட்டிருந்தன.

அதில், இன்று (14) புதன்கிழமை அதிகாலை  அதில் ஒரு விளக்கினை பொருத்தப்பட்டிருந்த பெரிய இரும்புக் குழாயினை அறுத்து சாய்த்து விட்டு சூரிய சக்தி மின் விளக்கை திருடிக் கொண்டு போயிருக்கிறார்கள் என்று அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.றாசீக் மிகுந்த கவலையுடன் எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், 

இச்சம்பவம் இடம்பெற்றதை அறிந்து உடனடியாக அங்கு சென்ற போது மிகவும் மன வேதனையாக இருந்தது மாத்திரமல்லாமல் வருகின்ற போகின்ற எல்லா விவசாயிகள், பயணிகள், பொதுமக்களுக்கு எல்லாம் மிகவும் மன வேதனையை கொடுத்தது. தயவுசெய்து இவ்வாறான அநாகரிகமான செயற்பாட்டின் மூலமாக தங்களுக்கும் தங்களைச் சூழ உள்ளவர்களுக்கும் அசெளகரியங்கள் ஏற்படுத்துவதை விட்டும் தவிர்ந்திருக்குமாறும், இவ்வகையான தொடர் செயற்பாடுகள் நீடிக்குமாக இருந்தால் இவ்வகையான அநாகரிகமான செயற்பாடுகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் வகையில் பிரதேச சபையும் பொதுமக்களும் செயற்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்வோர் சற்று தங்களுடைய மனசாட்சிக்கு இடம் கொடுத்து அரசின் பொதுச் சொத்துக்களை அமானிதங்களாக பாதுகாக்க ஒவ்வொருவரும் முன் வர வேண்டும் என்று அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.








பொதுச் சொத்துக்களை அமானிதங்களாக பாதுகாப்போம் - அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் பொதுச் சொத்துக்களை அமானிதங்களாக பாதுகாப்போம் - அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் Reviewed by Editor on December 14, 2022 Rating: 5