(றிஸ்வான் சாலிஹு)
ஐகோனிக் யூத்ஸ் சிறிலங்கா அமைப்பின் "கல்விக்கு கரம் கொடுப்போம்" செயற்திட்டத்தின் 2023 ஆம் கல்வியாண்டிற்கான கற்கை உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு அமைப்பின் ஸ்தாபக தலைவர் யூ.எம்.தில்ஷானின் வழிகாட்டுதலின் பேரில் அமைப்பின் தவிசாளர் முஹம்மட் நுஸ்கியின் தலைமையில் அண்மையில் அக்கரைப்பற்றில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இக்கற்கை உபகரணங்கள் கல்வியில் ஆர்வம் கொண்டதும் தேவையுடையதுமான விசேட மாணவர்களை தெரிவு செய்து, ஏழ்மையை ஒரு காரணமாக வைத்துக்கொண்டு கல்வியை விட்டு விலகாமல் எதிர்காலத்தில் சிறந்த நற்பிரஜையாக உருவாக வேண்டும் என்ற நோக்கத்திலும், கல்வி என்பது எல்லோருக்குமான உரிமை அதை பெற்றுக்கொடுப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என அமைப்பின் தலைவர் தில்ஷான் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று காதிரியா பாடசாலை, பதுர் வித்தியாலயம், ஹிஜ்றா வித்தியாலயம், ஹிதாயா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை சேர்ந்த 60 மாணவர்களுக்கு இக்கற்கை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், அமைப்பின் பொதுச் செயலாளர், நிறைவேற்று சபை உறுப்பினர்கள், பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.